பெரியவா மகிமை

 சங்கராம்ருதம் - 1211 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஏழை பணக்காரனாவது சாதனை பணக்காரன் ஏழையாவது சோதனை ஏழை ஏழையாகவே இருப்பது வேதனை


 ஆனால் மஹாபெரியவாளின் இறை சாம்ராஜ்யத்தில் வேதனைகளும் சோதனைகளும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாது


அதற்கு திருமதி. லலிதா நரசிம்மன் ஒரு உதாரணம்

பாடசாலை வெங்கட்ராம ஐயர் என்ற பெயர் காஞ்சி ஸ்ரீ  மடத்திலும் மடத்தை சேர்ந்த கைங்கர்ய மனுஷாளிடமும் மிகவும் பிரபலமான பெயர். மடத்தில் இருந்துகொண்டே மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் நன்றாக உழைத்தவர். 

எப்படி பட்ட ஒரு புண்ணியவான். பரமேஸ்வரன் கூடவே இருந்துகொண்டு நேரம் காலம் பார்க்காமல் பரமேஸ்வரனுக்கு தொண்டு செய்த புண்ணிய ஆத்மா இந்த பாடசாலை வெங்கட்ராம ஐயர்.

இந்த புண்ணிய ஆத்மாவின் குழைந்தைகளுள் ஒரு குழந்தை தான் லலிதா. இப்பொழுது இந்தக்குழந்தை திருமதி லலிதா நரசிம்மனாக பதவி உயர்வு பெற்று  வாழ்க்கையில் குடும்பம் என்ற உயர் நிலை வாழ்க்கைக்கு தலைவியாக இருக்கிறார்.

உங்களுக்கு  ஒவையார் பாடிய பாடல் ஒன்று தெரியும் என்று நினைக்கிறன். அந்தப்பாடல் இதுதான் “கொடிது கொடிது இளமையில் வறுமை”. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரிதான் நம்முடைய  லலிதா. நாம் வறுமையில் இருக்கிறோம் என்ற புரிதலும் உணர்வும் இல்லாமலேயே தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர் இந்த சிறுமி லலிதா..

இந்த மாதிரி குடும்பம் வறுமையில் வாடும் பொழுது  பசி காதை மட்டும் அடைக்காது. உள்ளத்தையும் அடைத்து கடவுள் என்ற வார்த்தை உள்ளே புகமுடியாத படி வழியை அடைத்துவிடும்.ஆனால் பசி வேறு பக்தி வேறு என்னும் அதிசயமான இயற்கைக்கு மாறான ஒரு வழியை தேர்ந்தெடுத்து மஹாபெரியவா ஜெபத்திலேயே இருந்த இந்த குடும்பத்திற்கு மஹாபெரியவா எப்படியெல்லாம் அருள் பலித்திருக்கிறார் என்பதை நாம் அறிந்தால் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகுவது நிச்சயம்.


லலிதாவின் தாயார் தன்னுடைய குழந்தைகள் பசியால் துடிக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய வீட்டில் இருக்கும் அண்டா குண்டா போன்ற வீடு சாமான்களை அடகுக்கடையில் வைத்து பணம் பெற்று குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவாள்.  ஒரு முறை வீட்டில் அடகு வைக்க ஒரு பொருளும் இல்லை ஒரே ஒரு சாதம் வடிக்கும் குண்டாவைத்தவிர..

லலிதாவின் தாயார் ஒரு நாள் மதியம் சாதம் வடிக்க மணி அரிசி இல்லை வீட்டில். என்ன செய்வாள் லலிதாவின் அம்மா. மஹாபெரியவா படத்தின் முன் உட்கார்ந்து அழுது விட்டு சாதம் வடிக்கும் குண்டாவை எடுத்துக்கொண்டு அடகு கடைக்கு தன்னுடைய விவரம் அறியாத  பன்னிரண்டு வயது மகள் லலிதாவை அழைத்துக்கொண்டு அடகுக்கடைக்கு சென்று கொண்டிருந்தாள். தாயாரின் பின்னாலயே விவரம் புரியாமல் பாடிக்கொண்டே தாய்க்கு பின்னால் போகும் கன்றுகுட்டிபோலவே போய்க்கொண்டிருந்தாள் சிறுமி லலிதா.

அடகுக்கடைக்கு சென்று கொண்டிருந்த லலிதாவையும் தாயாரையும் பாதி வழியிலேயே ஒரு மாட்டுவண்டி ஒட்டிக்கொண்டு வந்த கிழவர் வழியை மறித்தார்.

இருவருக்கும் விவரம் ஒன்னும் புரியவில்லை. ஆனால் அந்த வண்டிக்காரரே இவர்களிடம் பாடசாலை வெங்கட்ராம ஐயர் வீட்டிற்கு எப்படி போக வேண்டுமென்று கேட்டார். இவர்களும் ஒன்றும் புரியாது அந்த வண்டிக்கார கிழவரிடம் எதற்கு வெங்கட்ராம ஐயர் வீடு விலாசம் கேட்கிறீர்கள் என்று கேட்டவுடன் அந்த கிழவர் சொன்னார் :

“அம்மா மடத்தில் பெரியவர் என்னை அழைத்து ஒரு மூட்டை நல்ல சாப்பாடு பச்சரிசியை கொண்டு போய் பாடசாலை வெங்கட்ராம ஐயர் வீட்டில் இறக்கிவிட்டு திரும்ப அவரிடம் வந்து சொல்ல வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்கள். 

இதை கேட்ட லலிதாவின் தாயார்   அங்கு நடு ரோட்டிலேயே உட்கார்ந்து பரமேஸ்வரா மஹாபெரியவா .. என் பசி உனக்கு தெரிந்து விட்டதா. அதனால் என் குடும்பம் பசியாற அரிசி அனுப்பியிருக்கயா என்று சொல்லி கண்ணீர் விட்டு கதறி விட்டாள்.

இதைப்பற்றி ஒன்றுமே தெரியாத மகள் லலிதா தாயிடம் கேட்கிறாள் “என்னம்மா நடு ரோட்டிலே உட்கார்ந்து அழுதுண்டு இருக்கே. வாம்மா அடகு கடைக்கு போகலாம். போய் சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி சாதம் வடித்து சாப்பிடலாம்  அம்மா. எனக்கு ரொம்ப பசிக்கிறது அம்மா என்று அந்த குழந்தை சொன்னது.


“நாமெல்லோரும் பசியால் அவதிப்படுவது அந்த பரமேஸ்வரனுக்கு தெரிந்து விட்டதடி.நாமெல்லோரும் பசியாற நம் வீட்டிற்கு ஒரு மூட்டை அரிசியை வண்டியில் போட்டு அனுப்பியிருக்கிறார். இனிமேல் வீட்டில் பசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி லலிதாவை அழைத்துக் கொண்டு மாட்டு வண்டியுடன் வீடு திரும்பினார்.

“இன்று வரை வீட்டில் அரிசி இல்லாமல் இருந்ததே இல்லை" என்று திருமதி. லலிதா கூறுகிறார். 

நாளை,  இந்த லலிதவே ஒரு சமயத்தில் மஹா பெரியவாளை மனதார திட்டிய கடிந்து கொண்ட சம்பவத்தையும் அதற்கு மஹா பெரியவா புரிந்த அனுக்கிரஹத்தையும்  பற்றி  அறிவோம்..

 

 அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்

ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

Comments

Popular

மஹா பெரியவா அருளுரை

பெரியவா மகிமை

பெரியவா மகிமை