பெரியவா மகிமை
''இந்தப் பாத்திரமெல்லாம் என்ன வழவழப்பா நன்னா இருக்கு?''*- பெரியவா.
1971ஆம் வருஷம் பெரியவா காஞ்சியிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக கார்வேட் நகரத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பு அத்திமாஞ்சேரி என்ற கிராமம். அங்கு சில நாள் தங்கினார்கள். நான் பெரியவாளை நமஸ்கரித்து, பொதட்டூர் கிராமத்துக்கு வருகை புரியுமாறு விக்ஞாபனம் முன் வைத்தேன். ''நீ என்னை அழைத்துப் போகிறாயா? இன்றிரவு இங்கு தங்கி நாளை என்னை அழைத்துப் போ'' என்றார். நானே பெரியவாளை மிகுந்த தயக்கத்துடந்தான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் நேரடியான பாதை இல்லாததால் சுற்றி வளைத்துப் போகவேண்டும். அதனால் பத்து மைல் அதிகமாகும். அத்துடன் பெரியவாளுக்கு ரொம்ப சிரமமாக இருக்கும்.
அங்கிருந்தவர்களுக்கு என்னிடம் மிகுந்த வருத்தம். பெரியவாளை இப்படி சிரமப்படுத்த வேண்டுமா? என்று.
ஆனால் பெரியவா பிடிவாதமாக என்னுடன் புறப்பட்டுவிட்டார். போகும் வழியில் ''உனக்குத் தெரியுமா? நான் மடத்துப் பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டேன். இப்போது மடத்தில் இரண்டு பாராக்களும், இந்த ரிக்க்ஷாவும் கொடுத்திருக்கிறார்கள். (இதனை டைப் செய்யும் போது கண்களில் நீர்!. ஸர்வேச்வரனுக்கு நாம் படியளப்பதா?) எவ்வளவு எளிமை என்ன தன்னடக்கம். என்னை ஒரு பொருட்டாக மதித்து, இந்த மாதிரி பெரிய விஷயங்களைச் சொல்கிறாரே, என சங்கடமாக இருந்தது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு அத்திமாஞ்சேரியிலிருந்து பொதட்டூர் கிளம்பினோம். மூன்று மைல்கள் கரடு முரடான பாதை, வெயில் வேறு. கூடவந்தவர்களுக்கு என் மேல் கோபம்.
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே 'உனக்கும் இந்த வழி புதுசு போலிருக்கு' என்று கேட்டார்கள். எனக்கு வருத்தம், வெட்கம் கலந்த ஒரு மனோநிலை.
'இந்தப் பக்கத்து ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள் '
என்று சொல்லி வைத்தேன். என்ன சொல்வது?
'பொதட்டூர்பேட்டையில் என் க்ருஹத்திலேயே பெரியவா தங்க ஏற்பாடு செய்திருக்கேன்'.
'இந்த ஊரில் யாரும் குடிபோகாத புது க்ருஹம் ஏதாவது இருந்தால் சொல் அங்கேயே தங்கறேன்'.
இந்த சமயத்தில் ஒன்று சொல்லவேண்டும். எங்கள் ஊரில் நான் அடிக்கடி பெரியவா மகிமை பற்றிச் சொல்வதை முதலியார் ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பார். அதெல்லாம் கேட்டு அவர் பெரியவாளின் பரம பக்தராகிவிட்டார். 'அந்த மகானை தரிசிக்கும் பாக்யம் எனக்குக் கிட்டுமா? ஒரு முறை அவரை தரிசிக்க என்னைக் கூட்டிச் செல்லுங்கள்' என்று மனமுருகிச் சொல்வார். பரம பக்தரான அவர் என் வீட்டுக்குப் பின்னால் ஒரு புது வீடு கட்டி சீக்கிரம் க்ருஹப்ரவேசம் செய்ய உத்தேசித்திருந்தார்.
இது எனக்கு ஞாபகம் வந்து பெரியவாளிடம் சொல்ல அவரும் அங்கு தங்க சந்தோஷத்துடன் சம்மதித்தார். முதலியாரின் அத்யந்த பக்தி அவரை அவர் க்ருஹத்துக்கே வரும்படியான பாக்யத்தை அளித்துவிட்டது. ஸ்வாமிகள் வைக்கோல் பரப்பச் செய்து புது வீட்டில் ச்ரமபரிகாரம் செய்தார். மறு நாள் நான்கு மணிக்கு கிணற்றில் நீர் இறைக்கும் சத்தம் கேட்டது. எங்கள் பின்புறம் உள்ள கிணற்றில், தன் மரச் சொம்பால் நீர் இறைத்துக் கொண்டிருந்தார் பெரியவா. உடனே நான் அருகில் சென்றேன்.
'இதோ பாத்தியா... இந்த மரச் சொம்பு உடைந்திருக்கு.. கையைக் கிழிக்கிறது..' என்றார் பெரியவா.
மறு நாள் உதவி ஆசிரியரை விட்டு புது கமண்டலு முதலிய மர சாமான்கள் வாங்கி வரச் செய்தேன். குழந்தை புது பொம்மையப் பார்த்து சந்தோஷம் அடைவது போல் ''எவ்வளவு வழவழப்பா நன்னா இருக்கு'' என்று தடவிப்பார்த்துக் குதூகலித்தார். (இதை மனக் கண்ணால் கண்டு நானும் உவகை அடைகிறேன். அதே சமயம் ஸர்வேஸ்வரன் உடைந்த பாத்திரம் கையில் கிழிக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார் என்று நினைக்க கண்களில் மறுபடி நீர்).
ஜய ஜய சங்கரா...
ஹர ஹர சங்கரா...
kn
Comments
Post a Comment