பெரியவா மகிமை
குருமார்கள் எதையும் முன்பே அறிய கூடியவர்கள்" .
பெரியவா சரணம்
பெரியவாளைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி , மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர்.
பெரியவாளிடம் மூதாட்டி , “பெரியவா.. எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பார்க்குறான். சின்னவன் கான்பூர்ல நல்ல வேலைல இருக்கான். மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும் அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும் இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்தக் கஷ்டமும் படக்கூடாது” என்று சொல்லி வருந்தினார்.
விஷயம் கேட்ட மகான், “நீ போய்ட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா” என்று கேட்டார். மௌனமாக நின்ற இருவரிடமும், “ஒற்றுமையா இருங்கோ” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து வழியனுப்பினார்.
சில நாட்கள் கழித்து, முதியவர் பிள்ளைகளின் ஊருக்குச் சென்று தங்க சம்மதித்து டில்லியிலுள்ள மூத்த பிள்ளை வீட்டில் இருந்தனர்.
மருமகள், பேரன், பேத்திகளின் பாசமழையில் பொழுது இனிமையாக கழிந்தது. ஆறு மாதமாகி விட்டது.
ஒருநாள் இரவு முதியவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது. அன்று ஏகாதசி. மனைவியைப் பிரிந்த சோகத்தில் முதியவர் கவலையில் ஆழ்ந்தார்.
என்ன ஆச்சரியம்… மறுநாள் துவாதசி திதியன்று காலையில் முதியவரும் இறந்து விட்டார். கடமைகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டன.
இரு ஆண்டுகள் கழித்து, மூத்தமகன் காஞ்சிமடத்திற்கு வந்து பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.
அப்போது மகான், “உன் அம்மாவின் ஆசை நிறைவேறிடுத்து. இறப்பில் கூட பிரியவில்லை. ஏகாதசி அன்று போன அவள், மறுநாளான துவாதசியில் கோபக்காரனான உன் அப்பாவையும் அழைச்சுண்டு போயிட்டா பாத்தியா… பிதுர் கடமையை விடாம செய்து வா. உனக்கு ஆசியளிப்பா.” என்றார்.
‘ஏகாதசியன்று அம்மாவும், துவாதசியன்று அப்பாவும் காலமான விஷயம் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?’ என்று வியந்த மகன் ‘முக்காலமும் அறிந்த ஞானி காஞ்சிப் பெரியவா’ என்பதை அறிந்து, அவரது திருவடியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
kn
Comments
Post a Comment