தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

 தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.


மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது.


பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.


பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனாகிய நீலகண்டதீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈசுவரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிக்கை படிக்கிறார்! பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே?” என்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம். காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.


அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை அக்ஞையாகக் கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது “ஸெளந்தர்ய லஹரி” (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதானத்தைச் செய்கிறவன் ஈசுவரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது. அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றதுதான். “உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால்போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரசங்களும் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன” என்கிறது ஸெளந்தர்ய லஹரியில் இன்னொரு ஸ்லோகம் (த்ரயாணாம் தேவானாம்). மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுக்கள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள். நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லாத் தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள்.

Comments

Popular

மஹா பெரியவா அருளுரை

பெரியவா மகிமை

பெரியவா மகிமை