பெரியவா மகிமை
பாம்பே டையிங் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீ ரமணன் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர். ஸ்ரீ ஜோஷி என்ற பக்தரோடு இவர் ஸ்ரீ பெரியவாளை அடிக்கடி தரிசிக்க செல்வதுண்டு.
ஒருமுறை நான்கைந்து பக்தர்கள் தரிசித்து நிற்க ஸ்ரீ மஹாபெரியவா அத்வைத தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகத்தை அவர்களிடம் தந்து படித்துவிட்டு வருமாறு அருளினார்.
யாவரும் படித்தனர் இவரும் படித்தார். ஆனால் அந்த அத்வைத தத்துவம் யாருக்குமே விளங்கிக் கொள்ளும்படி இல்லை
பின் ஒருமுறை ஸ்ரீ ரமணன் தரிசிக்க அந்த புத்தகத்தோடு பெரியவாளிடம் நின்றார்.
"என்ன படிச்சுட்டயா புரிஞ்சுதா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க ஸ்ரீ ரமணன் "முழுசா புரிஞ்சுகக முடியலையே பெரியவா" என்று பதில் உரைத்தார்.
"அப்போ அந்த புத்தகத்தை இங்கே வைச்சுட்டு போ" என்று ஸ்ரீ பெரியவா அனுப்பி வைத்தார்.
அடுத்த தரிசனம் அப்போது திரு. பிர்லா அவர்கள் ஒரு பெருந்தொகையை சமர்ப்பித்து “இதை பெரியவா ஏத்துக்கணும்” என்றார்
"எனக்கெதுக்கு... சந்திரமௌலீஸ்வரரோட பூஜையை செஞ்சுண்டிருக்காரே அவருக்கு கொண்டு கொடுக்கலாம்" என்றார். பிர்லா ஸ்ரீ புது பெரியவாளைதான் ஸ்ரீ பெரியவா குறிப்பிடுகிறார் என்று புரிந்துக்கொண்டு “இல்லே பெரியவா... இதை நீங்கத்தான் ஏத்துக்கணும்” என்றார்.
"அவர்கிட்டேயே கொடுத்துடலாம்" ஸ்ரீ பெரியவா திரும்பவும் வலியுறுத்தினார், திரு. பிர்லாவும் திரும்பவும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
இப்படி தொடர, ஸ்ரீ பெரியவா சட்டென திரும்பி, ஸ்ரீ ரமணனையும் ஒரு பார்வை பார்த்தபடி தமிழிலேயே பிர்லாவிடம் பேசுவது போல்" பார்ப்பவனும் ஈசன்! பார்க்கப்படுபவனும் ஈசன்" அர்த்தம் கலந்த புன்கையை உதிர்த்தார்.
"என்னிடம் தந்தாலென்ன, ஸ்ரீ புது பெரியவாளிடம் தந்தால் என்ன எல்லாம் ஒன்றே" என்று பிர்லாவிற்கு பதில் அளித்திட்ட ஈசனாம் ஸ்ரீ பெரியவா, பார்க்கப்படும் அனைத்துமே ஈசன் என்று சொல்லிய ஒரு வார்த்தையிலேயே அத்வைத தத்துவத்தை
ஸ்ரீ ரமணன் அவர்களுக்கு புரியும்படி செய்துவிட்டார்.
ஒரு புத்தகத்தைப் படித்தும் அறிந்துக் கொள்ள இயலாத அத்வைத சாரத்தை சாக்ஷாத் ஈஸ்வரர் ஒரே வாக்கினால் அறிய செய்துவிட்டதை ஸ்ரீ ரமணன் வியக்கிறார்.
- ஸ்ரீ ரமணன்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
Comments
Post a Comment