பெரியவா மகிமை
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
ஸ்ரீ மடத்தில் நித்ய கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தரான ஒருவர் ஸ்ரீ கோபால கனபாடிகள் என்ற பக்தர் அவர்தம் அனுபவத்தை கூறினார்.
ஸ்ரீ கோபால கனபாடிகள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க சென்றபோது ஒரு வேதம் சம்பந்தமான பரிட்சை பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் பேச நேர்ந்துள்ளது. அப்பரிட்சையில் தேர்வானால் சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பிலிருந்து ஒரு ஊக்கக் தொகை கிடைக்கும் என்பதை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தபோது “என்ன சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்டா?" என்று ஸ்ரீ பெரியவா தனக்கு அதைப்பற்றி அறியாதவர்போல் கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ரீ கோபால கனபாடிகள் தனக்கு தெரிந்த டிரஸ்ட் விபரங்களை கூறியுள்ளார். அதாவது தெய்வமாம் ஸ்ரீ மஹாபெரியவாளின் அறுபது வருட பொற்காலத்தை விமர்சையாக கொண்டாட பக்தர்கள் ஈடுபட்டபோது, முற்றும் துறந்த மாமுனிவர் அதை ஏற்காமல் தன் எளிமையை காட்டியுள்ளார். அந்த சமயம் திரண்ட நிதியை ஒரு நற்பணிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட டிரஸ்ட் டிற்கு “சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்” என்று விபரத்தை இவர் விளக்கியுள்ளார்.
இதனை தெரியாததுபோல் கேட்டுக் கொண்ட ஸ்ரீ மஹாபெரியவா “இப்போதான் எனக்கு எண்பது ஆறதே அந்த டிரஸ்ட் பேரை சதாபிஷேக டிரஸ்ட்டுன்னுதானே மாத்தியிருக்கணும்” என்று தனக்கே உரிய குறும்போடு கேட்டுவிட்டு
"ஆமாம் 'சதம்' ன்னு சொன்னா நூறுன்னுதானே அர்த்தம்... அப்போ எண்பது வயசு பூர்த்தியை ஏன் 'சதாபிஷேகம்'னு சொல்றோம்" என்றும் கேட்டுவிட்டு தன் ஈஸ்வர தன்மையை வெளிபடுத்தும் விஷயத்துக்கு வருகிறார்.
"ஆமாம்... உனக்கு நூறுவயசுக்கு மேலே ஜீவிச்சுண்டு இருக்கிற யாரையாவது தெரியுமோ?" என்று ஸ்ரீ கோபால கனபாடிகளை கேட்கிறார்.
ஸ்ரீ கனபாடிகள் என்ன பதிலுரைத்தாரென்பது தெரியவில்லை. ஆனால் ஸ்ரீ மஹாபெரியவாள் தானே அதற்கு பதில் அளிப்பதுபோல்
“ஸ்ரீ ராமசுப்புன்னு ஒரு பெரியவர் இருக்கார் உனக்கு தெரியுமோ" என்று ஸ்ரீ ராமசுப்பு எங்குள்ளார் என்பதை இவரிடம் கூறிவிட்டு “அவருக்கு நூற்றுமூணு வயசாறது" என்ற தகவவையும் தந்தார்.
கோபால கனபாடிகள் ஸ்ரீ பெரியவா ஏதோ தனக்கு தெரிந்ததை சொல்கிறார் என்று அதை சாதாரணமாக பாவித்துக்கொண்டு கேட்டு நின்றார்.
"நீ ஒண்ணு பண்ணு... அவரைப் போய் பார்த்து இந்த பிரசாதத்தை கொடுத்தேன்னு கொடுத்துட்டு வர்றயா?" என்று சம்பந்தமே இல்லாத ஒரு கட்டளையாக இவரிடம் பிறப்பித்தார்.
ஸ்ரீ மஹாபெரியவாளின் திருகட்டளையை ஏற்று ஸ்ரீ கோபால கனபாடிகள் ஸ்ரீ ராமசுப்பு அவர்களின் வசிப்பிட விபரங்களை அறிந்து கொண்டு கிளம்பிச் சென்றார்.
ஸ்ரீ ராமசுப்பு அவர்களின் இல்லத்தில் நுழைந்தபோது முன்பின் அறிந்திராத அந்த 103 வயது முதியவர் இவரைப் பார்த்தவுடன் "ஸ்ரீ பெரியவா வரா.... ஸ்ரீ பெரியவா வரா” என்று ஆனந்தமாக வரவேற்றார்.
இவருக்கு அதுவே பெரும் அதிசயமாக மெய்சிலிர்ப்பூட்டியது "இல்லே இல்லே எனக்கு கோபால கனபாடிகள்ன்னு பேரு... நான் பெரியவா இல்லே... ஆனா பெரியவா சொல்லிதான் உங்களை பார்க்க வந்திருக்கேன் பிரசாதம் கொடுத்தனுப்பியிருக்கா” என்று இவர் சொன்னார்.
உடனே அந்த பெரியவர் உணர்ச்சி பெருக்கெடுத்தவராக "ஆஹா! பெரியவாளின் கருணையே கருணை” என்று வியந்தவராய் அந்த அதிசயத்தை இவரிடம் கூறினார். இந்த முதியவரின் தந்தையும் நூறாண்டுகளை கடந்து வாழ்ந்தவராம் சிவபூஜை செய்துக் கொண்டிருந்தபோதே அவர் ஆன்மா பிரிந்துள்ளது.
என்னை ஒவ்வொரு குருவாரமும் என் பையன் ஸ்ரீ பெரியவா தரிசனத்துக்கு அழைச்சுண்டு போவான். ஆனா நேத்து வியாழக்கிழமை அவனாலே அழைச்சுண்டு போகமுடியலே... எனக்கு நேத்தெல்லாம் ஒரே ஏக்கமா இருந்தது” என்று ஸ்ரீ ராமசுப்பு இவரிடம் கூறியபோது ஸ்ரீ பெரியவா அதே நேரத்தில் முந்தைய தினத்தில் இவரைப்பற்றி பேசிக் கொண்டிருந்த அதிசயத்தை நினைத்து கோபால கனபாடிகளுக்கு தெய்வத்தின் அபார கருணை புரியலாயிற்று.
சஷ்டிஅப்தபூர்த்தி டிரஸ்ட்டில் ஆரம்பித்து ஏதோ தொடர்பே இல்லாமல் நூறு வயதை கடந்தவர்களைப் பற்றி பேச்சை திருப்பி எங்கிருந்தோ தரிசனம் செய்ய முடியவில்லையே என்று ஏங்கிய பக்தருக்கு பிரசாதம் அளித்து அனுப்பிய தெய்வத்தின் மாபெரும் காருண்யத்தை வியந்து கனபாடிகள் மெய்சிலிர்த்தார்.
மேலும் அதன்பின் பெரும் அதிசயமாக அப்பேர்பட்ட பாக்யமடைந்த ஸ்ரீ ராமசுப்பு என்ற முதியவர் ஸ்ரீ பெரியவாளெனும் இறைவனடியை ஒரிருநாளில் அடைந்த பாக்யமும் பெற்றுள்ளார்.
இன்னும் ஒரு அரிய சம்பவத்தையும் அவர் அனுபவித்துள்ளார் “பெரியவாளுக்கு எல்லாம் தெரியுமாமே பாப்போம்" என்று அவநம்பிக்கையும், விதண்டாவாதமுடனும் ஒரு வாலிபன் ஸ்ரீ கோபால கனபாடிகளுடன் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வந்தானாம்.
இவர்கள் தரிசித்து நின்றபோது இன்னொரு வாலிபன் இயலாத மிகவும் வயதான தன் தாயாரை தன் கையில் சுமந்தபடி வந்தான்.
ஸ்ரீ மஹாபெரியவாளெனும் எல்லாமும் அறிந்த தெய்வம் “உன் அம்மாவோட பேரு சந்திரலேகா தானே... நான் உங்க ஊருக்கு வந்தபோது உன் அம்மாவும் இன்னோரு சுமங்கலியும் எனக்கு ஆரத்தி எடுத்தாளே” என்று கேட்டு விதண்டாவாதி வாலிபனை ஆச்சர்யபட வைத்தார்.
அதோடு நிற்காமல் அந்த வாலிபனிடம் திரும்பினார். “உன்னோட தாத்தா வட்டி கடை வைச்சுருந்தார்னு உனக்குத் தெரியுமோ... வட்டி கொடுக்க முடியாத ஒரு பிராமணரை ஒருதரம் அடிச்சுட்டார்னு தெரியுமோ" இப்படி ஸ்ரீ பெரியவா கேட்டதும் அவன் திகைத்து விட்டான். இந்த தகவல்களை அவன் தன் தந்தையிடம் கேட்டறிந்ததில் ஸ்ரீ மஹாபெரியவாளெனும் தெய்வத்தை பூர்ணமாக உணர்ந்து கொண்டவனாய் சரணாகதமடைந்தான்.
• ஸ்ரீ கோபால கனபாடிகள்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
Comments
Post a Comment