பெரியவா மகிமை
"ஓடுங்கடா! ஓடுங்கடா!"
(ஒரு கிழவர் தடியும் கையுமாக திருடனைப் பார்த்து)
ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்த விசுவநாதன் என்பவருக்கு பெரியவா எப்படி அருள் செய்தாரென்று பார்க்கலாம்.
மனைவியோடு ஊருக்குக் கிளம்புமுன் விசுவநாதன் பூஜை அறைக்கு வந்து பெரியவா படத்தை நமஸ்கரித்துவிட்டு, "ஊரில் திருட்டு பயம் அதிகமாகி இருக்கிறது: நீங்கதான் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டு கிளம்பிச் சென்றார்.
போன சில நாட்களில், வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு, பொருள்கள் திருட்டுப் போயின!' என்று கேள்விப்பட்டு பதறிக்கொண்டு வீடு திரும்பினார்.
பொருளெல்லாம் சிதறிக் கிடக்கும் அலங்கோலத்தைப் பார்த்து போலீஸை வரவழைத்தார். கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மெள்ள சுதாரித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, எவையெல்லாம் காணவில்லை என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் எதுவுமே திருட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீடோ ஒரே களேபரமாக இருக்கு. ஆனால் எந்த சாமானையும் திருடர்கள் எடுத்துச் செல்லவே இல்லையே! என்ன நடந்தது என்று திகைத்தார்கள்.
அந்த நேரம் போலீஸிடம் ஒரு திருடன் பிடிபடவே, விஸ்வநாத ஐயரையும் ஸ்டேஷனுக்கு வந்து விசாரணையில் கலந்துகொள்ள வேண்டுமென்று போலீஸ் கூப்பிட்டது. அங்கே சென்றவருக்குத் தனது வீட்டில் திருடர்கள் ஏன் எதையும் எடுக்கவில்லை என்ற மர்மம் தெரிந்தது. புதிர் விடுபட்டது.
திருடன் சொன்னதாவது, "நாங்கள் இந்தப் பெரியவர் வீட்டைக் கொள்ளையடிக்க நினைத்து பூட்டை உடைத்தது உண்மைதான். பொருட்களை எல்லாம் கலைத்துப் போட்டுவிட்டு பணமும், நகையும் தேடப் போனபோது ஒரு கிழவர் தடியும் கையுமாக வந்து, "ஓடுங்கடா! ஓடுங்கடா!" என்று விரட்டவே, பயந்து போய் நாங்கள் எதையும் எடுக்காமல் ஓடிவிட்டோம். அவரைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருந்தது!"
அந்தக் கிழவர் பக்தர்கள் ஏவலையும் கேட்கும் மகா பெரியவாதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!" என்றாலும் தம்பதிக்கு ஒரு பெருங்குறை: "நாம் தினமும் பூஜிக்கிறோம் :நம் கண்ணுக்குத் தெரியாதவர் இந்தத் திருடன் கண்ணுக்குத் தெரிந்தாரே!" என்பதுதான் அந்தக் குறை. இறைவன் திருவிளையாடல் இப்படித்தான் இருக்கும்.
விழுந்து விழுந்து சிரமப்பட்டுக் கோயில் கட்டின ராமதாஸுக்கு காட்சி தராத ராமபிரான், "ஏன் கட்டினாய்?" என்று சவுக்கெடுத்து விளாசிய தானிஷாவுக்குத் தானே முதலில் காட்சி தந்தார். ஏன் இப்படி என்றால்,
பக்தனாக ஏற்கனவே இருப்பவனைப் பற்றிக் கவலை இல்லையே: யாருக்கு பக்தி இல்லையோ, அவனையும் பக்தனாக்கி கோயில் கட்ட வைக்க வேண்டுமே: அதற்காகத்தான்.!
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
Comments
Post a Comment